இருத்தலியமும் போர்ப் பைசாசமும்
கி. தினேஷ் கண்ணன்
சிறுகதைகள், நாவல்கள், சினிமா என பரந்துபட்ட படைப்புத் தளங்களில்
இயங்கி வரும் எழுத்தாளர் ஷோபாசக்தியினது படைப்புகளின் மைய
இழையாகவும் பின்புலமாகவும் புறச் சூழலாகவும் அகப்போராட்டங்களாகவும்
அமைந்திருப்பது போரும் அதன் தாக்கங்களும் அகதி வாழ்வுமேயாகும். போர்
என்பது எவ்வகையானும் நிகழக் கூடாத ஒன்று. ஆனால் வரலாறு
நெடுகிலும் மேலதிகமாக அதுவே நிகழ்ந்து வந்துள்ளது. அனைத்து எல்லைக் கோடுகளும் ரத்தத்தினாலேயே போடப்பட்டவை.
பேரினவாதம் இருப்பதிலேயே
கொடுங்கோன்மையான இரக்கமற்ற போர்களுக்கும் அவலங்களுக்கும் வழி
செய்கின்ற ஒன்று. அதுவே இலங்கையை பிடித்த போர்ப் பைசாசம்.
ஆங்கிலேயே காலனிய சுதந்திரத்திற்கு பின் அமைந்த சிங்கள அரசால்
தமிழர்களின் உரிமைகள் வெகுவாக பறிக்கப்பட்டன. அதனை எதிர்த்து
அகிம்சையை முன்னெடுத்த தந்தை செல்வா உள்ளிட்டோரின் போராட்டங்கள்
அலட்சியம் செய்யப்பட்டன. பின்னாட்களில் கொதித்துப்போன இளைய
தலைமுறையினர் ,எதிரிகள் தீர்மானித்த ஆயுதத்தை கையில் எடுத்துப் போராடத்
தொடங்கினர். அவ்வாறாக பல இயக்கங்கள் தலையெடுத்தன.
கொரில்லா முறை தாக்குதலும் நேரிடைப் போருமாக தீவு முழுவதும் போர்
அனைவரது வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. விரும்பியும்
வலிந்தும் இயக்கங்களில் ஆட்கள் சேர்ந்தனர், சேர்க்கப்பட்டனர்.
இயக்கங்களும் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டும் தடை செய்தும் வந்த
குழப்பகரமான சூழல் அது. ராணுவம், போலீஸ், இயக்க முகாம்கள் என
சற்றும் மனிதத்தன்மையற்ற சித்திரவதைகளுக்குப் பலர் உள்ளானார்கள்.
அகதிகளாக பல்வேறு தேசத்தில் தஞ்சம் புகுந்தவர் பலர்.
இத்தகுப் போர்ச் சூழலைப் பின்புலமாகக் கொண்டு எழுந்த, அதன் தீவிரத்தை
உணர்த்துவதாக அமைந்த கதைகளே எழுத்தாளர் ஷோபாசக்தியின்
கதைகளும் நாவல்களும். போர் என்பது புறச்சூழலின் மீது மட்டுமல்ல அது
அகவயப்பட்ட தாக்குதலும் ஆகும். போர் ஒரு தனிமனிதனின் சுயத்தில்
எத்தனை வடுக்களைத் தருகின்றது என்பது சொல்லி மாளாதவை. போரினால்
ஆட்கொள்ளப்பட்டு அகதியாகத் தஞ்சமின்றி துடிக்கும் ஒருவனுக்கு
இருத்தலியம் Existentialism என்பது உச்சகட்டப் பதைபதைப்பு. போர் என்ற
இருத்தலிய சூழ்நிலையே வாழ்க்கை முறையாகிப் போன ஒரு தேசத்தில்
வாழும் மக்களின் மத்தியில் ஒருவன் உட்செல்லும் மேலதிக அதீத சமூக-மன- உடல்ரீதியான சித்திரவதைகளால் அவனின் அகவயச்
சூழலில் இருத்தலியத்துக்கான தேடலும் கேள்வியும் முதன்மையானதாகவும் உச்சபட்சமானதுமாகவே இருக்கும். போர் குறித்த என்றும் மறக்க முடியாத
வலிகளை சுமந்து அகதி வாழ்விற்கு செல்பவர்களின் கதைகளே இவைகள்.
எண்ணங்களில் இருந்து மீள முடியாமலும் ஒரு சராசரி வாழ்க்கையில்
பொருந்திப் போக முடியாமலும் மீண்டும் மீண்டும் அந்தச் சகதியிலேயே
மல்லாந்து விழும்படிக்கு வாழ்பவர்களே சராசரிக்கு பொருந்திப்போக
முடியாதவர்களின் உண்மைத் தேடலாகிய இருத்தலியத்திற்கு வலிந்து
அழைத்து வரப்படுபவர்களான அகதிகள்.அவர்களின் வாழ்வு தீவிரமானதாகும்.
அத்தகையதொரு தேடலின் பதற்றமே ஷோபாசக்தியின் நாவல்களையும்
கதைகளையும் நோக்கி என்னை இட்டுச் சென்றது.
போரின் கொடுமைகளைச் சொல்லும் கதைகளில் எளிதில் நிகழ்ந்து
விடக்கூடிய உணர்ச்சிவசப்படுத்தல் மிகையாகாமல் ஒரு மனிதனின் போர்ச்
சூழலிலான வாழ்க்கையை அவன் கடந்து செல்லும் அத்தனை உண்மையான
மனநிலைகளிளேயே கதைகள் நகர்கின்றது. கொரில்லா, ம், இச்சா ஆகியன
எழுத்தாளரின் முதல் மூன்று நாவல்கள். அதற்கு முன்பே சிறுகதையாளராக
பரிணமித்திருந்த ஷோபாசக்தி அவர்கள் 2001ஆம் ஆண்டு போர்
சமயத்திலேயே எந்த சமரசமும் இன்றி கொரில்லா நாவலை வெளியிடுகிறார்.
கொரில்லா நாவல் பாரிஸில் மூன்று முறை நிராகரிக்கப்பட்டு நான்காவது முறையாக அகதி தஞ்சம் கோரிய விண்ணப்பத்துடன் தொடங்குகிறது.
முன்னும் பின்னுமாக நகரும் கதைக்களத்தின் சம்பவங்களில் ரோக்கிராஜின்
கதையாக நாவல் விரிகின்றது. குஞ்சன்வயல் கிராமத்தில் நிகழும் கதை,
அந்தக் கிராமம் உருவான சாதிய வரலாறு, ரோக்கிராஜின் தந்தை தனது
சண்டித்தனங்களுக்காக கொரில்லா என பெயர் எடுத்ததோடு அதே பெயர்
ரோக்கிராஜுக்கும் வழங்கலானது வரை கதை விரிகிறது... நாடகம் பழகச்
செல்வதாகச் செல்லும் ரோக்கிராஜ் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி செய்கிறான்.
அவனது தீவிரதில் பயிற்சியின் ஒரு பகுதியாக அடிவாங்க முற்படும்போது,
அவன் ஒரு காட்சியை ஆக்கினை செய்கிறான்.
“இரண்டு கையையும் பொத்தி
பிடிச்சு ஒருக்கா நல்லா காத்த இழுத்து நெஞ்சுக்குள்ள விட்டு நெஞ்சை விரிச்சு
விரிச்சு சுருக்கினான். டக்கென்டு மண்டைக்குள்ள ஒருக்கா தமிழ்ழீத்தை
கொண்டு வந்தான் “ஒரே பச்சை எந்த வளத்தால பார்த்தாலும் பச்சை
வரிசையாய் ஒரே அளவிலான வீடுகள். பச்சைகளுக்கு நடுவில் முதுகுல
துவக்குகளோட நிண்டு ஆம்பிளையளும் பொம்பிளையளும் வயல் வேலை
செய்யினம்.”
இவன் போலவே பலர் இயக்கத்தில் ஆர்வத்துடன்
சேர்கின்றனர். ஒருவன் ஆயுதம் என்னை ஈர்த்தது என இயல்பாகவே
ஒப்புக்கொள்கிறான்.பயிற்சியின் பின் தன் ஊருக்கே முகாம் வேலைக்குச்
செல்லும் ரோக்கிராஜுக்கும் அவன் தேப்பன் கொரில்லாவுக்கும் சண்டை
வலுக்கிறது. இவ்வமயம் ஒரு மணல் திருட்டைத் தடுத்த ரோக்கிராஜ், அவன்
இயக்கத்தாலேயே மணல் எடுத்தவர் இயக்கத்திற்கு பண உதவி செய்வதால்
மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறான். பின் அவன் ஒன்றுமற்ற விஷயத்திற்கு
இயக்கம் தன்னை வெளியேற்றியதாக நொந்து கொள்கிறான். பின்னரும் வெடி
சிலிண்டரை தேடியதாக இயக்கத்தால் சித்திரவதை செய்யப்பட்டு பின்
கொழும்பு செல்கிறான். அவன் காரணமே இல்லாமல் போலீசாராலும் பல
சித்திரவதைகளை அனுபவிக்கிறான். பின் கதை ஐரோப்பிய நகருக்கு
நகர்கிறது. அங்கும் அகதி வாழ்வில் முறையற்று வாழ்ந்து பல
குற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு சிக்கலான வாழ்க்கை சூழலாக கதை
விரிகின்றது. கொரில்லா நாவலை விளங்கிக் கொள்வது கடினம்
வேண்டுமெனில் இது உதவலாம். "துவக்கு அவனை சுட்டு இவனை சுட்டு பின்
சும்மா இருந்தவனையும் சுட்டது.”
ம் என்பது இன்னும் ஆழமாக வரலாற்று சம்பவங்களின் ஊடாக அரங்கேறும் நாவல். அவற்றில் முக்கியமானவை வெலிக்கடை சிறைப் படுகொலைகள், மட்டக்களப்பு சிறையுடைப்பு என பனைத்தீவைச் சேர்ந்த பாதிரியாருக்கு படிக்கும் நேசகுமாரனின் கதை அவன் ஐரோப்பாவிலே சிறையில் தனது மகள் நிறமியின் கதையைச் சொல்லத் தொடங்குவதிலிருந்து விரிகின்றது.
நேசகுமாரன் அரசியல் ஈடுபாடு கொண்டதனால் அவனை அதிலிருந்து
விலக்கி வைக்க சிங்களப் பிரதேச பாதிரி கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படும்
நேசகுமாரன் யாழ் நூலக எரிப்பினால் கொதித்து கல்லூரியிலிருந்து தப்பி ஒரு
முழுவதும் நிறுவப்படாத இயக்கத்தில் சேர்ந்து தன்னிச்சையான சாகச
செயல்களில் ஈடுபடுகிறான். பின் போலீசில் சிக்கி சிறை செல்கிறான்.
இதற்கிடையில் நாவலில் குறிப்பிடப்படும் சாதி நிலைகள் கவனிக்கப்பட
வேண்டியவை “குஞ்சன்வயலில் இயக்கங்கள் நுழைந்த போதே சாதிவாரியாக
ஆட்கள் சேர்ந்து கொண்டார்கள் அல்லது சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.
மற்றைய ஊர்களைப் போலவே இயக்கங்களால் மரண தண்டனை
விதிக்கப்பட்ட போது முதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர் “ஒரு பஞ்சமரே".
நாவலில் வெலிக்கடை சிறைப் படுகொலைகள், வரலாற்றுச் சித்தரிப்புகள்.
“இனிவரும் சில பக்கங்களை வாசிக்காமல் கடந்து விடுவதால் வரலாற்றை
கடந்து விட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா” என்று தொடங்கும் அந்த
விவரிப்பு, பேரினவாதம், இனவெறி என்பதின் விளக்கங்களாக
வெளிப்படுகின்றது. “நான் அடைபட்ட செல்லின் பூட்டை உடைத்து என்னை
கொன்று விடுவதற்கு அவர்கள் தள்ளுமுள்ளுப் படலானார்கள் நான்
நினைக்கிறேன் அவர்கள் அப்போது கள்ளோ சாராயமோ
குடித்திருக்கவில்லை, எனினும் அவர்கள் போதை ஏறிய கண்களுடனும்
சுளித்த உதடுகளுடனும் தள்ளாடினார்கள் அவர்களிடம் நிதானம்
இருக்கவில்லை,அவர்கள் ஒருவரை ஒருவர் வசவுகளால் திட்டிக்
கொண்டார்கள்.ஒவ்வொரு கோடரி வீச்சுக்கும் ஒவ்வொரு உளிக்குத்துக்கும்
ஒவ்வொரு அடிக்கும் ஒரு ஜெயவேவா சத்தம் எழுந்தது. தரையில் முழுதும்
ரத்தச் சகதி,கொலைகாரர்கள் நடக்கவும் முடியாமல் ஓடவும் முடியாமல்
வழுக்கி வழுக்கி விழுந்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா,என்
கண்ணால் கண்டேன்." இவ்வாறு அந்தச் சித்தரிப்பு நீள்கிறது. தப்பித்துச்
செல்கையில் போலீசிடம் சிக்கி மீண்டும் சிறைவாசத்தில் பக்கிரியுடன் இருந்து, பின்
ஒரு பைத்தியக்கார நீதிபதியால் விடுவிக்கப்பட்டு ஊர் செல்கையில்
இயக்கத்திடம் சிக்கித் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்ததாகப் பக்கிரி
கொல்லப்படுவதை பார்க்கிறான் நேசகுமாரன். பின் கதையை முழுவதுமாக
எழுதிவிட முடியாத வகைக்கு நேசகுமாரனின் உணர்வுச் சங்கிலி அறுபட்டு
ஒரு உளவியற் சிக்கலின் உச்ச நிலையில் நாவல் முடிகின்றது.
இவ்விரு நாவல்களைப் போலல்லாது இச்சா மேலும் தீவிரமானதான ஒரு பெண் கரும்புலியின் கதையை விவரிக்கிறது. ஒரு சிறைக் கைதியின் கிறுக்கல் பக்கங்களை ஆராய்வதுடன் தொடங்கும் நாவல் அந்த பக்கங்களில் உள்ள அவளின் கதையாக, பதுமர் குடிப்பெண்ணின் கதையாகத் தொடங்குகிறது.பதுமர் கிராம வாழ்வியல் விழுமியங்களும் பேய், பைசாசம் முதலான அவர்களின்
நம்பிக்கைகளும் சிங்களப் பாட்டும் மந்திரகுமாரி கதை நாடகமுமாக ஒரு
கலாச்சார இணக்கத்தை விவரிக்கிறது. பின் அவர்களின் கிராமம் வலிந்து
வரவழைக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களால் ஒரு கட்டத்தில் முற்றாக கைப்பற்றப்படுகின்றது. காட்டுக்குள் பதுங்கியிருந்த இயக்கத்தினருக்கு
உதவியதாக் கூறி ஆலாவின் தம்பியை ஊர்க்காவல் படையினர்
கொல்கின்றனர். ஆலாவும் கடும் துன்பத்திற்குட்படுத்தப்படுகிறாள். எனினும்
ஒரு இயக்கத்தவனின் துப்பாக்கியால் காப்பாற்றப்பட்டு பின் தன்
அப்பாச்சியால் நேரும் ஒரு சிக்கலிலிருந்தும் துப்பாக்கியே அவளைக்
காப்பாற்றுகின்றது. பின் ஆலா என்ற இயக்கப் பெயரோடு அவள்
பயிற்றுவிக்கப்படுகிறாள். என்றும் ஆபத்துகளில் நிராதரவாய் நின்றிருந்த
ஆலா துப்பாக்கியால் தன் இருப்பை உணர்கிறாள்.
“என் இருப்பு கந்தக
மணத்தாலும் ஓசையாலும் தீயாலுமானது என நினைத்துக் கொண்டேன்"
என்கிறாள். “என்னை அவமானத்கிலிருந்தும் ஆபத்திலிருந்தும் காப்பாற்ற ஒரு
துப்பாக்கியால் மட்டுமே முடிந்திருக்கிறது." என நினைக்கிறாள். பின் இயக்கத்தால் கரும்புலியாக
மாற்றப்பட்டு ஆப்ரேஷன் இரட்டைச் சிறகுகள் என்ற பெயரில் ஒரு
தற்கொலைத் தாக்குதலுக்காக ஆலா பயன்படுத்தப்படுகிறாள். ஆலா என்றுமே
ஒரு மாட்சிமை பொருந்திய மரணத்தை எதிர் நோக்கினாள். இலங்கை
தற்கொலையில் முதலிடம் வகித்தது.அர்தமற்று எதற்கும் தற்கொலை செய்துகொள்ளும் அச்சூழலில் அர்த்தமற்ற சாவை ஆலா வெறுத்தாள்.
பின்னாளில் ஆபரேஷன் கைவிடப்பட்டு ஆலா ஒரு வெற்றுச் சுவர் மேல்
மோதி வெடித்துச் சாகவேண்டும் என்றதும் அவள் தன் இருப்பை
கேள்விக்குள்ளாக்குகிறாள். அந்த கனநேர கணத்தில் போலிஸில்
பிடிபடுகிறாள். பின் அளவற்ற விசாரணை முகாம் கொடுமைகளும் போதை
ஊசி செலுத்தல்களுமாக இரண்டு வருடம் இவ்வாறு இருந்த பிறகு ஆலாவிற்கு
300 வருட கடுவூழிய சிறை தண்டனை வழங்கப்படுகிறது. தினமும் ஒரு
காகிதமும் அதில் அவள் எழுதுபவையுமே அவளை உயிர்ப் போடு வைத்திருப்பவையாகும். தன்னை சித்திரவதை
செய்யும்போது தான் எப்போதும் நிகழ்காலத்தில் அன்றி பத்து நிமிடம்
முன்னாலேயே இருப்பேன் என்று மரத்துப் பேசும் ஆலா எழுத்தின் மூலம்
ஆறுதல் கொண்டாள். அதன் மூலம் அவள் தன் மாட்சிமை பொருந்திய
மரணத்தை கூட கற்பனை செய்திருந்தாள். அவள் கடும் நோயினால்
சிறையிலே மரித்தாள். தனது உண்மையான பெயர் என்னவென்பதையே மறந்திருந்த கேப்டன் ஆலாவின் பெயர் வெள்ளிப் பாவையாகும்.
ஒரு உயிருள்ள ஆலா பறவையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என
முடியும் நாவலின் பின்னட்டை படம் கூட நம்மை ஏதோ ஒன்று செய்யும்.
இம்மூன்று நாவல்களிலும் போர் சூழலில் வாழும் அனைவரும்
எதிர்கொண்ட பிரச்சனைகளே பேசப்படுகிறது. எழுத்தாளரின் கூற்றான
“உலகம் முழுமைக்கும் ஒரே ஒரு கதை தான் இருக்கின்றது" என்பதை நாம்
விளங்கிக் கொள்ள வேண்டியதாகிறது.
போரின் உளவியலை இவ்வாறு விவரிக்கிறது நாவலின் ஒரு பகுதி." போர்ச்
சூழலில் வாழும் அனைவருக்கும் ஒரு பொதுவான உளவியல்
பண்பென்றுதான் நான் நினைக்கிறேன். போர் என்பது அளவில் பெரிய சிறை
தானே. அங்கே சிக்கிக்கொண்ட மனிதர்களின் உளவியலும் சிறைக்
கைதிகளின் நிலையை ஒத்ததுவே. உயிரைத் தக்க வைப்பதற்காக எதையும்
செய்யக்கூடிய மனிதர்களாக அவர்கள் ஆக்கப்பட்டு விடுகிறார்கள். இரக்கவும்
பொய் சொல்லவும் வழிபடவும் நிர்வாணப்படுத்திக் கொள்ளவும் காட்டிக்
கொடுக்கவும் நியாயப்படுத்தவும் போர் அவர்களை வடிவமைத்து விடுகிறது.
மூன்று(கொரில்லா, ம், இச்சா) நாவல்களிலும் புனைவு என்று
குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்த கதைகள் உண்மையில் இருந்து
விளைந்தவையே.போரின் தீவிரதத்தை அதன் உண்மை நிலையில் விளங்கப்
பண்ணுபவையே. இதுபோன்ற,இதனிலும் கொடுமையான அனுபவங்கள்
பலருக்கும் இருக்கிறது. “ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாய் அழைந்து திரியும்
ஒவ்வொருவரின் வாழ்வும் ஒரு இலக்கியம்தான்" என்ற கூற்றே அதைத்
தெளியப்பண்ணுகிறது. கற்பனைக்கெட்டாத கொடுமைகளை நெருக்கடிகளை
எதிர்கொள்ளும் போர்ச்சூழல் கதைகளாகையின் இதனை Fiction என்று குறிப்பிடுகிறார்
எழுத்தாளர் என்றே கருதத் தோன்றுகின்றது. உண்மை இதனினும்
பயங்கரமானது என்ற தன்னுணர்வான அறிதலோடு இக்கதைகளை நாம்
வாசிப்பதே நம்மை உறைய வைக்கிறது. சில்லிட வைக்கின்றது.
நூல்கள் :
கொரில்லா , ம் , இச்சா
நாவல்கள் -ஷோபாசக்தி
Comments
Post a Comment