ப. சிங்காரம் - அர்த்தத்தைத் தேடும் தேடலின் அர்த்தம்

கி. தினேஷ் கண்ணன்

ப. சிங்காரத்தின் படைப்புகளை முன்வைத்து*

           


                                                                                                                    

"எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்" 


மதுரை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்த பா.சிங்காரம் தென்கிழக்காசிய நாடுகளில் போர்களுக்கிடையேயான தனது வாழ்வனுபவங்களை நாவல்களாக எழுதி இருக்கிறார் என்று கருதி வந்ததனாலேயே ஒரு மகத்தான படைப்பாளியின் புத்துயிர்ப்பூட்டும் உள்ளீடுகளை இலக்கியம் இழந்து நிற்கின்றது. பா.சிங்காரம் தன்னைக் கலனாகக் கொண்டு இலக்கியத்தைக் களமாகக் கொண்டு மொழியைக் கைகொண்டு படைத்தலித்திருக்கும் இந்நாவல்கள் படைப்பிலக்கியத்திற்கு செழுமை சேர்த்ததோடு பன்முகத்தன்மை கொண்ட மனிதர்களின் பொதுமையை விசாரணை செய்யும் களங்களாக தன்னை வரித்துக் கொண்டுள்ளது.

பொதுமையை, பல கலாச்சாரங்களில் இருந்து வந்த மனிதர்களால் நிரம்பி ஒத்திசைவுடன் வாழும் தன்மையினால், அவர்களின் வாழ்வியல் சாரங்களினால், அவர்கள் அனைவரையும் ஒருங்கே மருட்டும் போரின் விளைவுகளினால், நாவல் சாத்தியப்படுத்துகிறது. நாவல் நெடுகிலும் பல சமூக செயல்பாடுகள் நடக்கின்றது; பல வகைப்பட்ட மனிதர்கள் வந்து போகிறார்கள், ஆனாலும் அங்கே தனிமை என்பதை உலகக் கூறாக ஒவ்வொருவரின் உள்ளும் இருக்கப் பண்ணுகிறது. நாவலின் களமானது தென்கிழக்காசிய நாடுகளில் அமைந்துள்ளது. மலேயாவின் பினாங்கு தீவு; இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிளுள்ள மெடான் நகரம், தாய்லாந்தின் பேங்க்காக் எனப் பரந்துபட்ட களங்களில் நாவல் கருக் கொள்கிறது. இவ்விடங்களில் புலம்பெயர்ந்து வந்து வேலை செய்யும் தமிழர், சீனர், காலனியாதிக்கம் செலுத்தும் டச்சுக்காரர்கள், அவர்களை வெல்லும் ஜப்பானியர், இறுதியில் வந்து கைப்பற்றும் ஆங்கிலேயர், உள்ளூர் மலாய்க்காரர்கள் என அனைவரின் வாழ்வும் கலந்து காணப்படும் வாழ்வியல் கலாச்சார மற்றும் மொழியின் கூட்டுக்கலப்பாக இவ்விடங்களின் சூழலும் வாழ்வுமுறையும் உள்ளது. இத்தன்மையே நாவலின் களத்திற்கு புதிய பரிமாணத்தையும் பரந்த நோக்கத்தையும் தமிழர்களின் வாழ்வு மட்டுமல்லாது இவ்வனைவரது வாழ்வின்- அவர்களின் மனதின் உளவியலின்,வாழ்வியலின் சாரமாக நாவலின் நகர்வு நிகழ்தேருகின்றது.

எம்மக்களாயினும் அனைவரின் பாடுகளும் கூட்டுப்புத்தியும் காலத்தாலும் போர்களாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஒருங்கே இட்டுச் செல்லப்பட்டு மனிதனின் பொதுமையை விளக்கி நிற்கிறது. இவர்களின் வாழ்வில்

 படையெடுப்புகளும் போர்களின் வெற்றி தோல்விகளும் நிலையற்ற தன்மையைப் புகுத்தி இவர்களை மருட்டுகின்றது. சாதாரண தொழில் செய்யும் மக்களிலிருந்து போர் வீரர்களின் அணிவகுப்புகள்வரை அந்நகர்களின் தெருக்கள் ஒரு அசாத்திய பன்மையை, பதட்டமான அதேசமயம் அதை ஏற்று வாழப் பழகிக் கொண்ட மக்களின் வெளிப்பாடாக உருவங்கொள்கின்றது.நாவல் முழுவதிலும் பல்வேறு தெருக்கலும் கடைகளும் மதுபான விடுதிகளும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இவைகளிலேயே கதை தன்னை நிகழ்த்திக் கொள்கின்றது. 

கடலுக்கு அப்பால் நாவல், ஐ.என்.ஏவின் நிலைகுலைவிலிருந்து தொடங்குகின்றது. அதில் பதவி வகிக்கும் செல்லையா போன்ற இளைஞர்கள் ஆங்கிலேயரிடம் கைதியாகாமல் இருக்க, தன்னிச்சையாக

தங்களின் தொழில்முறை ஊர்களுக்கு விரத்தியோடு தங்களின் இனியான வாழ்வை அமைத்துக் கொள்ள கிளம்புகின்றனர். பின் செல்லையாவின் கதையில், அவன் சாதாரண வாழ்விற்கு பொருந்திப்போக முடியாத, தனது காதலைக் காப்பாற்ற வழிதெரியாத இளைஞனாய் நிற்கின்றான். மற்றைய இளைஞர்கள் மீண்டும் தங்கள் சாதாரண வாழ்வில் நிலைகொண்டதுபோல் செல்லையாவால் நிலை கொள்ள முடியவில்லை. தனது காதலையும் இறுதியில் காப்பாற்ற முடியாமல் சமுதாயத்தின் கட்டமைப்புகளால் அலைக்கழிக்கப்பட்டு நொந்து வாழும் செல்லையாவின் நீட்சியாக புயலிலே ஒரு தோணியில் பாண்டியன் வருகிறான். ஆனால் பாண்டியனின் கதை செல்லையாவின் கதை நிகழும் காலகட்டமன்றி போருக்கு முந்தையான அது தொடங்கும் காலகட்டத்தில் நிகழ்கின்றது. பாண்டியன் சுமத்ராவில் ஜப்பானிய படையெடுப்பின் பின்னான வெற்றியின் சுவடுகளை, போரினால் ஏற்பட்ட பதட்டமான சூழலை தெருக்களில் திரிந்தபடி பார்ப்பதோடு தொடங்கி, பின் பாண்டியனின் பயணமாக விரியும் நாவல், அவனின் தனிமையை;அவனின் பொருந்திப்போக முடியாத தன்மையை புயலில் சிக்கிய தோணியாக அல்லற்படும் அவனின் நிலையை முதன்மையாகக் கொண்டு நகர்கின்றது. பா.சிங்காரத்தின் மனைவி மகவின் இறப்பே செல்லையாவின் காதல் தோல்வியாகவும்; அவரின் அதற்குப் பின்னான தனிமை வாழ்வே பாண்டியனின் நிலையற்ற அலைதலின் உளப்பாங்காகவும் கொள்வது பொருத்தமாக இருக்கும். 



மக்கள்-தெருக்கள்-பயணங்கள்-ஞாபகங்கள் :

 "தபே துவான், தபே"

ஊர்களும் தெருக்களும் நாவல் நிகழும் களங்களாக மட்டுமின்றி அவையே தனித்தனி கதாபாத்திரங்களாக உருவங்கொள்கின்றன. ஒவ்வொரு தெருவும் அதன் சிறப்பியல்புகளை பிரதிபலிப்பனவாக நாவல் நெடுகிலும் அதன் விவரணைகளும் சூழல்களும் விரித்துரைக்கப்படுகின்றன. போர்க்காலங்களிலும் அதன் பிந்தைய காலங்களிலும் இத்தெருக்கள் தன்னிலை வழுவியும், மீண்டும் ஒழுங்கமைதி கொண்டும், மக்களின் வாழ்வியல் தளங்களாக நாவல் நெடுகிலும் உயிரோட்டங்கொள்கின்றன. செட்டித் தெரு என அழைக்கப்படும் பினானங் ஸ்ட்ரீட்; சூலியா தெரு; கிங் தெரு; பேராக் தெரு; பிஷப் தெரு எனப் பினாங்கு தீவின் தெருக்களில் செல்லையா திரிகையில், அதன் தன்மைகள் நாவலில் விவரணைகளாகுகின்றன. சுமத்ராவின் மெடான் நகரில், கெர்க் ஸ்ட்ராட்; மொஸ்கி ஸ்ட்ராட்; கொழும்பு ஸ்ட்ராட்; மெட்ராஸ் ஸ்ட்ராட் எனப் பாண்டியன் திரியும் தெருக்கள் உயிரோட்டம் உள்ள கதாபாத்திரமாக பரிணமித்து நிற்கின்றன. தமிழக ஊர்களில், மதுரையின் ஞாபகங்கள் அனைத்து தமிழர்களிடத்திலும் ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒருமுறையேனும் தமிழகம் சென்று அனைத்தையும் பார்த்து வரவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது. பாண்டியன் தனது ஊரான சின்னமங்கள நினைவுகளை மகிழ்ச்சியான நாட்களாக எண்ணிச் சிலிர்த்து அந்த நாட்களுக்கு ஏங்குபவனாக நாவலில் கருக் கொள்கிறான். தான் காணும்- பயணிக்கும் இடங்களுக்கும் தெருகளுக்கும் அர்த்தம் கற்பிக்கிறான்.இவ்வாறு இடங்களுக்கு அர்த்தம் கொடுப்பதில் ஒரு நெருக்கத் தன்மையை ஏற்படுத்திக் கொள்கிறான். மெடானிலிருந்து பினாங்கிற்கு கப்பலேறும் பாண்டியனின் கடற்பயணம் அவனுள் பல உணர்வுகளைக் கிளர்ந்தெழச்செய்கின்றது. அவன் பயணிக்கும் கடலில் நிகழ்ந்த தமிழரின் பயணங்களை சிந்தித்துப் பார்க்கிறான்.'இந்த அலைகளின்மீது தமிழரின் வணிக நாவாய்கள் கூட்டம் கூட்டமாய்த் துறைமுகங்களை நாடிச் சென்றிருக்கின்றன'. 'சோழர்களின் போர்க் கப்பல்கள் இந்தக் கடலைக்கிடுகலக்கித் திரிந்த காலமும் உண்டு'. என எண்ணமிடுகின்றான்."புயலால் அலைப்புண்டு நாவாய்களுடன் மூழ்கிய வணிகர், மாலுமிகள் எத்தனை எத்தனை பேர்! எங்கிருந்து எங்கே சென்றனர், எவ்வாறு முடிவெய்தினர்?" எனக் கடற்படரப்பில் மனித வரலாற்றின் தொடர் மாறுபாடுகளை நினைத்துப் பார்க்கிறான். மதுரையைக் குறித்த பாண்டியனின் நினைவுகள் அவ்வூரின் மீதான, தான் கண்ட நினைவுகளாய் இரண்டு அத்தியாயங்களுக்கு நீள்கின்றன. மாலையில் குளக்கரை உள் தட்டு நெடுகிலும் நெருக்கமாய் அகல் விளக்குகள் எறிய எண்ணற்ற தங்கவேல்களால் குத்துண்டது போல் தண்ணீர் குழம்பி மின்னுவதான ஆழமான நினைவுப் பாதையில் பாண்டியன் பயணிக்கிறான். 


நாவல்களின் அழகியல் :      

"உள்ளிருந்து மாஜோங் விளையாட்டோசை வந்தது"

தீர்க்கமான மொழி நடையோடு காட்சிகளின் விவரணைகளும் செயல்களின் விவரணைகளும் கவிதைகளாக உருவங்கொண்டு காட்சிகளை- செயல்களை- நிகழ்வுகளை தெளிந்த சொல்லோட்டங்களோடு விளக்கி நிற்கின்றன. கதாபாத்திரங்களின் அசைவுகளின் நளினமும் அவர்களின் பேச்சு மொழியின் செரிவும் கருத்தாக்கங்களின் பற்றுக்கோடுகளாக நாவலைச் செழுமையுறச் செய்கின்றன. சுற்றிலும், சீனர்களிடம் தமிழில் விலை பேசும் பெண்களின் கூச்சலும், மலாய்க்காரிகளின் இழுவையான இன்குரலும், சீனப் பெண்களின் ஙொய்ங் புய்ங் இரைச்சலும் கலந்து குழம்பி ஒலிக்கின்றன.

 தமிழர்களின் சொல்லாடல்களும் அவர்களின் சொல் வழக்குகளும் அப்போதைய காலகட்டத்தின் மிச்சங்களாகவே இன்று கருதம்படிக்கு உள்ளது. பினாங்கில் கடை வைத்து தொழில் செய்யும் தமிழர்கள் அனைவரும் செட்டிகள் என்றே அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பெயர்களின் முதல் எழுத்தையே குறிப்பிட்டு ஒருவரையொருவர் சுட்டுகின்றார்கள். 'வாவன்னா கேனாவானா' (வாழ்ந்தகெட்ட வள்ளியப்பச் செட்டியார்) போன்றதான சுட்டுப் பெயர்கள் அதற்கு உதாரணமாகும். நாவலில் தமிழ் செய்யுள்கள் பல தருணங்களில் கையாளப்பட்டு- ஆராயப்பட்டு நாவல் நெடுகிலும் விரவிக்கிடக்கின்றன. அவற்றிற்குப் புதியதான ஒப்பீட்டு அர்த்தங்களோடு இம்மனிதர்களால் அவை விவாதிக்கப்படுகின்றன. பின்நவீனத்துவ பாணியில் ராமாயண பாத்திரங்களும், சிலப்பதிகார இளங்கோவடிகளும் தென்கிழக்காசிய தெருக்களில் உலாவுகின்றனர். 

சமயங்களில் பொருத்தமான இடங்களில் நாட்டு வழக்கு பாடல்களும் வருகின்றன.சுபாஷ் சந்திரபோஸும் பாண்டியனும் சந்திக்கும் காட்சியில், 'மஞ்சளாடிய செம்முகத்தில் தடித்த கண்ணாடி வட்டங்களுக்கு அப்பால் தெரிந்த சின்னஞ்சிறு கூறிய கண்கள் எதிர்த்த கண்களின் வழியாய் நெஞ்சை ஊடுருவி நோக்கின' என்பதான செரிவான விவரணைகள் நாவல்களில் நிறைந்திருக்கின்றன. ஓசைகளும் சத்தங்களும் அதன் ஒலிக்குறிப்புகளோடு விளக்கப்படுகின்றன. 'ஹி ஹி ஹி' என்ற சிரிப்பொலியும், 'பட் பட் பட்' என்ற துப்பாக்கிச் சத்தமும் நிகழ்வுகளினதும் உரையாடல்களினதும் முப்பரிமாணப் புரிதலை வழங்குகின்றன. 'தென்னை மரங்களுக்கிடையே தெரிந்த அத்தாப்பு வீடுகளில் இருந்து மலாய்ப் பெண்களின் கலங்கமற்ற பேச்சொலி வந்தது' என்ற சூழல் அமைப்புகளும், சந்தடிக் கூச்சல்களும் சீனச் சிறுவர்களின் விளையாட்டு இரைச்சலும் தெருவை நிறைக்கின்றன. சாதாரணமாய் கடந்து போகும் மனிதர்களும் முப்பரிமாணங்கொண்டு தெருக்களில் உலவுகின்றனர். 'கைலிக் கடை வையாபுரி முதலியார் ஆழ்ந்த சிந்தனையுடன் தரையை பார்த்தவாறு கடந்து சென்றார்' என நிகழ்விடங்களின் உயிர்ப்பை நாவல் கட்டமைக்கிறது. அதேபோல் கதாபாத்திரங்களின் அடிமனச் சிந்தனையிலிருந்து வெளிப்படும் சொற்களை; அவர்களின் செயல்பாட்டை நுட்பமான விவரணையின் மூலம் நாவல் எட்டி இருக்கின்றது. மரகதத்தின் காதல் நினைவுகளாக வரும் எண்ணங்கள், "அம்மா, ஊருக்கு போனதும் உங்க ரெண்டு பேரையும் சங்கிலியால கட்டிப் போடுறேன் னில சொல்லுது, கட்டட்டும்; நல்லா நல்லா அவுக்க முடியாம கட்டட்டும்" என அவளின் காதலின் அப்பழுக்கற்ற தன்மைகள் வெளிப்பாடாகின்றன.'தாயின் கை மகளின் தோளிலும் மகளின் கை தாயின் இடுப்பிலுமாக உள்கட்டை நோக்கி நடந்தார்கள்' போன்ற காட்சி ஆக்கங்கள் நுட்பமாக, மனதின் எண்ணங்களின் விளைவெழுத்துக்களாக மிளர்கின்றன. 

தன்னைக் கொல்ல வந்த பாண்டியனிடம் கெஞ்சும் சுந்தரத்திடம், பாண்டியன், 'சுந்தரம் உன்னை கொல்ல வந்திருக்கிறேன் காப்பாற்றுவதற்கு அல்ல. சாகப்போகிறவன் குரலை உயர்த்தி பேசக்கூடாதது. அது சாவு துன்பத்தை அதிகரிக்கும்.' எனக் குழந்தையைத் தாலாட்டும் தாயின் குலுங்குரலில் சொல்கிறான். 

இந்தோனேசிய விடுதலைக்காக மெர்டேக்காவில் ஒரு படைப்பிரிவிற்குப் போர்ப்படைத் தலைவனாக பாண்டியன் டச்சுக்காரர்களைத் திணரடிக்கிறான்.

'பாண்டியனின் பெயரும் உருவும் கற்பனை வடிவெடுத்தன. ராஜா உத்தாங்-காட்டரசன்!உடலில் உருக்குக் கவசமும் கையில் பட்டாக் கத்தியுமாய் வெள்ளைப் புரவிமீது பறந்து செல்வான். ஜின்களின் அருள் பெற்றவன். குண்டுகள் அவன் உடலை அணுகா. ராஜா உத்தாங் ஹிடூப்!'


மக்கள்-போர்கள்-வெறியாடல் :

"கைகள் நடுங்கின,உதடு துடித்தது,கண்கள் கலங்கின,தலையைத் தாழ்த்தி முழங்கால்களுக்கிடையே வைத்தார்"

போர்கள் நகரங்களை, அதன் வாழ்நிலை சமன்பாட்டை, மக்களின் மனநிலையைக் குழைத்துப் போடுகின்றன. மனிதனின் ஆதிப் பண்பான உயிர்வாழ்தலின் பதட்டத்தை; அவர்களின் கீழ்நிலையை வெளிக்கொணர்கின்றன. சமயங்களில் சீறுவதற்கும் சமயங்களில் இறைஞ்சுவதற்கும் அவர்களை இட்டுச் செல்கின்றன. வெற்றி வாகை சூடியவர்களாக மெடான் நகரில் ஜப்பான் ராணுவம் நுழைகிறது. வெற்றி ஆரவாரங்கள் கொள்ளைகளாக; கொலைகளாக; நகரின் சூறையாடல்களாக நடந்தேறுகின்றது. சாலைகள்; தெருக்கள்; கட்டிடங்கள் என அனைத்தும் நாசக்காடாய் காட்சியளிக்க, அவற்றினுள் ஈசல்போல் மொய்த்திருக்கும் மனிதக் கும்பலின் களவு வெறி இரைச்சல்.

 மந்தைக் கூட்டம் பிளந்த வாயும் வெறித்த கண்ணுமாய்ச் சுழிந்து வளைந்து கத்திக் கூத்தாடுகிறது. மறைவிடங்களிலிருந்து பெண்களைக் கொண்டைப் பிடியாய்க் கைப் பிடியாய்க் கால் பிடியாய் இழுத்துச் சென்றனர். பகலவன் பார்த்திருந்தான்; நிலமங்கை சுமந்திருந்தாள்; ஊரார் உற்றுநோக்கிக் களித்து நின்றனர். 

கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு! எல்லாம் இடங்கால வாய்புகளின் விளைவு.

ஹக்கா வில்ஹெல்மினா முக்கு வெற்றிடத்தில் பிளந்த வாயும் மங்கிய கண்களுமாய் ஐந்து தலைகள் மேசைமீது கிடந்தன, இல்லை-நின்றன. சூழ்ந்திருந்த ஜப்பானியர் சிரித்து விளையாடினர். சீப்புக்காரன் ஓய்வு ஒழிச்சலின்றித் தலைகளை ஒன்றன்பின் ஒன்றாய் மாறிமாறி, மெதுவாய், அக்கறையுடன் வாரிவிட்டுக்கொண்டிருந்தான்

பினாங்குத் தீவில் ஜப்பானியர்களின் வெற்றியின் போது அவர்களை வரவேற்ற அதே மக்களால், "பிரிட்டிஷ் வெற்றி வீரர்களுக்கு, முன்வழக்கம்போல், வரவேற்பு இதழ்கள் படித்துக் கொடுக்கப்படுகின்றன. 

போர் மக்களிடத்தில் உடனடி விளைவுகளாகவும் நீண்ட நெடிய பதட்ட சூழலை உருவாக்கியும் அலைக்கழித்தது. பெட்டியடிகளில் எல்லாம் எப்போதும் எல்லாரிடையேயும் ஒரே கேள்வி-மூன்று கிளைகளையுடைய பதில் தெரியாத கேள்வி-யுத்தம் எப்போது முடியும்? அதுவரை எப்படி வயிறு வளர்ப்பது? , இருப்பதை வைத்துத் தின்றால் எத்தனை நாளைக்கு வண்டி ஓடும்?

 கிழக்காசிய போர்ச் சூழலில் இரண்டாம் உலகப் போரின் போக்கே பெரும்பங்கு வகிக்கிறது. ரஷ்யாவுடன் மோதி இழுபறிப் போரில் ஈடுபடுவதைவிட தெற்கு ஆசியாவில் பாய்ந்து ரப்பர்; ஈயம்; பெட்ரோல் முதலிய அடித்தேவைப் பொருள்களை எளிதாய் பெறுவதே நலம் என்ற சாதக பாதக முடிவுகள் எட்டப்படுவதை நாவல் விளக்கி நிற்கும். போர் என்ற நிலையற்ற அசாத்திய சூழ்நிலையில் வாழ்ந்தும்; அதைக் கண்ணுற்றும்; அதில் கலந்துகொண்டு, விடை தெரியாது தன்னகத்தே எழும் கேள்விகளைச் சுமந்து கொண்டு திரிபவர்களே பாண்டியன், செல்லையா போன்ற இளைஞர்கள்.

"எவ்வளவு சுலபமான மாற்றம், வெற்றி-தோல்வி; வாழ்வு-தாழ்வு; பெருமை-சிறுமை."


நண்பர்கள்- கனவுகள்- உரையாடல்கள் :

"இருக்கட்டும் அதைப் பற்றி இன்னொருநாள் விரிவாகப் பேசலாம்" 

நாவல் நெடுகிலும் தெருக்களில், உணவு விடுதிகளில், மதுபான விடுதிகளில், காபி கடைகளில் நண்பர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்களின் மூலமே பல புரிதல்களை பா.சிங்காரம் சொல்லிச் செல்கிறார். இவர்களின் உரையாடல்கள் கேலிப் பேச்சுகளாகவும், தமிழ் ஆராய்ச்சிகளாகவும், சமூக கண்ணோட்டங்களாகவும்- கருத்தாக்கங்களாகவும், சமயத்தில் தத்துவ விசாரணைகளாகவும் பரிமாணங் கொள்கின்றன. "நேதாஜி திட்டத்தில் என்ன கோளாறு? நமக்கு வெற்றி கிட்டாதது ஏன்? நேதாஜி திட்டத்தில் இருந்த பெரிய கோளாறு அவருடைய சாவுதான்."

"பாண்டி, உங்கள் நாட்டுக்கு எப்போது விடுதலை? அடுத்த தைப்பூசம். தைப்பூசத்தன்று பரம்பரை வழக்கப்படி காவடியாட்டம் தான்"போன்ற தெரு உரையாடல்களும், புயலிலே ஒரு தோணியில், நேதாஜி ராணுவம் தொடங்குவதற்கு முன்னான காலகட்டத்திலேயே அது மாதிரியான ஒரு எழுச்சியைக் கனவு காண்பவர்களாய், அதற்கு அவர்கள் சித்தமாய் இருப்பது அவர்களின் உரையாடல்களின் சாரத்தில் விளங்குகின்றது. 

"அதிர்ச்சி வைத்தியத்தை நிகழ்த்தும் கருவி? 

வீர இளைஞர் அணி; அதற்கு அஞ்சாநெஞ்சம் படைத்த ஒரு தலைவன், பிறகு மன்னுருக்கெல்லாம் உண்டியும் உடையும் உரையுளும்"

 அது இளமையின் நம்பிக்கை மேலோங்கி நின்ற காலம்; யுத்த நெருக்குதல் காரணமாகக் கனவுப்பான்மை மிகுந்திருந்த சமயம். சுதந்திரம் கிடைத்ததும் ஓர் உத்தரவு; எல்லாருக்கும் உணவு, உடை, வீடு! பெட்டியடிப் பையன்களாக, தோட்டத் தொழிலாளியாக காலந் தள்ளிய இவ்விளைஞர்கள், அதிலும் அதிகப்படியான தமிழர்கள் ஐ.என்.ஏ உருவானபோது அதில் சேர்ந்ததில் ஆச்சரியமில்லை. இவர்களின் உரையாடல்கள் கனவுகளாகவும் நம்பிக்கைகளாகவும் மட்டும் முடிந்துவிடவில்லை. அதன் எதிர் கருத்துக்களும் சமுதாயக் கற்பிதங்களின் மீதான அவநம்பிக்கைகளும் சேர்ந்தே வெளிப்படுகின்றது. 

"எல்லாம் நன்மைக்கே எனும் அழுகுணிக் கும்பலில் நீயும் சேர்ந்து விட்டனையோ? நாம் எதை நம்புவது? 

இருள் விலகி ஒளி பிறக்கும் என்பதை. ஒளிப்பிறக்காவிடில் இருளையே ஒளியென நம்புவது. " என்ற விவாதங்களும்; பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போலான தமிழ் வீர ஆராய்ச்சிகளும் நிகழ்த்தேறுகின்றன. தமிழ் மக்களின் இன்றைய நிலை குறித்த கருத்தாக்கங்கள் நண்பர்களிடையே நடந்தேறுகின்றன. 

"தமிழ் மக்கள் முன்னேற வேண்டுமானால் முதல் வேலையாக பொதியமலைப் போதையிலிருந்து விடுபட வேண்டும்.

வீரத்தமிழ் கொடிவழியில் வந்தோரெல்லாம் இப்பொழுது எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மலையாவில் ரப்பர் வடிக்கிறார்கள். இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள். பர்மாவில் மூட்டை தூக்குகிறார்கள். கயானாவில் கரும்பு வெட்டுகிறார்கள். பாரத கண்டம் எங்கும் பரவிப் பிச்சை எடுக்கிறார்கள்" என்ற உரையாடல்கள் நிலையற்ற அசாத்திய சூழலில் அவ்விளைஞர்களைத் தங்களுக்கு சொல்லப்படும் கற்பிதங்களை நோக்கி கேள்வி கேட்கும், அதை எதிர்க்கும் மனோநிலையாக வெளிப்படுத்தச் செய்தது. ஆனால் இப்போதைய சூழலில் அக்கேள்விகள் மட்டுப்படுத்துகின்றதென்றே கருதத் தோன்றுகின்றது. 

"உனக்குத் தெரிந்திருக்குமே குற்றம் சாட்டப்பட்ட எளியவர்களிடம் நீதிதேவன் கேட்கும் கேள்வி என்ன? 

நீ குற்றம் செய்யவில்லை என்பதை எனக்குப் பிடித்தமான வகையில் மேய்ப்பிக்க முடியுமா?" 

"வலியோரிடம்?" 

என்று வியந்து முடியும் கேள்வி இன்றளவும் பொருத்தப்பாடுடையதாக உள்ளது. டச்சு மேஜரான ஒரு இளைஞனுக்கும் பாண்டியனுக்கும் நடக்கும் உரையாடலில், தேசியம் என்ற கட்டமைப்புப் பிம்பம் குறித்தான கருத்தாக்கங்கள் விவாதிக்கப்படுகின்றன. 

"ஆகவே ஒவ்வொரு செயலுக்கும் நெஞ்சின் தீர்ப்பு என்ற நங்கூரம் வேண்டும் இல்லையா! 

தன் மனமே தன்னைச் சுடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடு அது. அந்தப் பாதுகாப்புடன் எதுவும் செய்யலாம், கொல்லலாம், எறிக்கலாம், நொறுக்கலாம்? "

இவ்வுரையாடல் நமது சிந்தனையை கோரி நிற்கிறது. 

பாண்டியன், தான் இந்தோனேசியா விடுதலைக்காகப் போராடப்போவதாக சொல்லும்பொழுது அவனுக்கும் தங்கையாவுக்கும் நிகழும் உரையாடல் கற்பனை எது? உண்மை எது? என்ற விசாரணையில் இறங்குகின்றது.தனது அதீத கேள்விகளுக்கு விடையறிய முடியாத பாண்டியன் கற்பனையை உண்மை என ஏற்கின்றான். வேலியற்ற அறிவு மனிதனை அழிக்கும் என்ற முடிவுக்கு வருகிறான்.  

"ஐயம் ஏற்படும் போது வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற கொள்கை உறுதுணையாக இருக்கும்". 

மிதந்து நீந்த அல்லது மூழ்கிச் சாக ஒரு வாய்க்கால், அதில் பிடித்துத் தள்ள ஒரு வல்லான். 

"மானிடன் தப்ப வழியில்லையா? இல்லை குளத்தில் விழாமல் தப்பினும் குட்டையில் வீழ்வதை தவிர்க்க முடியாது" அதுவே சமூகத்தின் சுயநலம். 

"நல்லது எது? தீயது எது? 

சமுதாயம் தனது மொத்த நலனைக் கருதி நல்லதென்றும் தீயதென்றும் விதிப்பது" 

"நிலையான உறவு எது? உடைமை எது? நிலையான திறமை எது? சாதனை எது? 

எதுவுமே இல்லை. எனவே தான் நிலையற்ற வாழ்வில் நிலைகான நிறைய கற்பனைகள்",என்று தன்னை மட்டுப்படுத்திக் கொள்கிறான். தனது மனதின் சலிப்பே இக் கற்பிதங்களை தான் ஏற்றுக்கொள்ள காரணமாக, ஒரு லட்சியவாத பங்கேற்பாகவன்றி, நாடு; வீரம் என்ற கற்பிதங்களைத் தனக்கான தன் கேள்விகளிலிருந்து தப்பித்தலுக்கான, எல்லையற்ற மனதில் அளவுக்கு மீறிய அறிவு குழப்பத்தையே ஏற்படுத்தும் எனத் தன் கேள்விகளை ஆற்றுப்படுத்திக் கொள்கிறான். 


பெண்கள் :

" என்னைத் தொடர்ந்தோடிப் பற்றிச் சிணுங்கி நச்சரியாயோ? "

 நாவல் நெடுகிலும் மனிதர்களின்; உரையாடல்களின்; சூழல்களின் பின்புலத்தில் பெண்கள் வரத் தவறுவதில்லை. ஊரின் வாழ்வியலைக் கூறுகையில், தாய்மார்கள்; குடும்பப் பெண்கள்; குடியானவப் பெண்கள் கூறப்பட்டாலும் உரையாடல்களில் பெரிதும் வந்து போவது விலைமாதர்களே. அவர்களைப் பற்றிய பேச்சுக்கள் எப்படியும் உரையாடல்களுக்கிடையே வந்துவிடுகின்றது.பாண்டியன் தனது இளம்பிராயத்து அனுபவங்களை நினைக்கும் பொழுது ஊர்களில் விலைமாதரின் தெருக்களில் அலைந்த நினைவுகள் அவனுள் ஏற்படுகின்றது. செல்லையாவின் காதலி மரகதம் தனது விருப்பங்களை வாழா நிற்பவளாக; எதிர்க்கத் துணியாத பெண்ணாக இருகிறாள். இத்தன்மை பயத்தினால் அல்லாது வழிவழி வந்த கற்பிதங்களாலானது. இச் சமூகக் கற்பிதத்தால் காதல் தோல்வியடையும் செல்லையா, உலகம் தோன்றியது முதல் எத்தனை செல்லையாக்கள்; எத்தனை மரகதங்கள்! என கண்ணீர் விட்டு அமைதி அடைகிறான்.பாண்டியனோ காதல் என்ற முழுமையில் ஒன்ற முடியாதவனாய் வாழ்கிறான். நாவலின் வரும் ஆயிஷா என்ற விலைமாது பாண்டியனை நேசிக்கின்ற, அவன் மீது அக்கறை கொண்ட பெண்ணாக உயிர் கொள்கிறாள்-நிறை கொள்கிறாள். பின்னவீனத்துவ நடையில், சட்டியும் கையுமாய் சாலையோரம் நின்று கொண்டிருக்கும் இளங்கோவடிகளிடம் உரையாடத் துவங்குகிறான் பாண்டியன் "ஆ...அதோ! அடிகாள்! பூம்புகார்த் துறவிகாள்! உங்களைத்தான், உங்களையேதான் அழைக்கிறேன்" என்று அவரை வம்புக்கு இழுக்கின்றான். 

"நினைவெளுந்தால் வீதிக்குள் நல்ல விலை மாதருண்டிந்த மேதினியில்" 'அடிகாள், என்ன முன்யோசனை, என்ன நுட்பபுத்தி' என்று அவரின் வரிகளைக் கொண்டு அவரைச் சீண்டுகிறான்.

 நாவலில் பெண்களைக் குறித்தான கண்ணோட்டம் இழிவானதென்று எண்ணுவதற்கு இடமில்லை. இவ்வனைத்து கீழ்மைகளும் மேன்மையின் மீதான ஏக்கங்களே.  

"கண்மணியே கேள்; தாயின் பாதுகாப்பில் இருக்கவேண்டிய காலத்தில் வேசையரின் மார்பில் மிதந்தேன். மனையாளின் அரவணைப்பில் அடங்க வேண்டிய வயதில் மனையறத்தை வெறுத்து

மனம் குழம்பித் திரிகின்றேன்.

நான் தன்னந்தனியன், 

என் காதலீ! 

அன்னையற்ற எனக்குத் தாயாகி மடியிற் கிடத்தித் தாலாட்டவல்லையோ? தமக்கையறியா என்னை இடுப்பில் வைத்துக் கிள்ளி அமுதூட்டிப் பின் முத்தாடி ஆற்ற ஒவ்வாயோ? தங்கையற்ற என்னைத் தொடர்ந்தோடிப் பற்றிச் சிணுங்கி நச்சரியாயோ...? 

"உன்னை அறிவதால் என்னை மறக்கிறேன்" எனத் தன்னிலிருந்தே தப்பிக்கப் பார்க்கிறான். 

போருக்கு பின் மெடான் நகரறிற்குத் திரும்பிய பாண்டியனை ஆயிஷா சந்திக்க வருகிறாள். அவளை சந்திக்கும் பொழுது நிகழ்வது பாண்டியனின் உண்மையான உன்னத ஏக்கத்தை, அவனின் அசாத்திய வாழ்க்கையின் தவிப்பை விளக்கி நிற்கும்.

"கதவைத் தள்ளி நுழைந்து பாசப் பார்வையுடன் ஆயிஷா வந்தாள்

 'பாண்டீன்! பாண்டீன்!' 

உடல் புல்லரித்தது கால்களைத் தடாலென்று கீழே இறக்கி எழுந்தான்

"வேண்டாம் வேண்டாம் உட்கார்"

"மனம் தடுமாறியது ஏன்..

ஏன்.. உட்கார்ந்தான்."

கைகள் கன்னத்தைத் தடவ, கோவைச் செங்கனிவாய் பட்டும் படாமல் நெற்றியில் முத்தமிட்டது. நெருப்பில்லை. குளிர்விக்கும் சுனைநீர். 

இமைப்பொழுதில் உடல் காங்கை தணிந்து போயிற்று.

“என் சகோதரன்! என் சகோதரன்.”

மீண்டும் நெற்றியில் முத்தினாள். குளிர் நீர், சுனை நீர், பனிநீர்.

“அயிஷா!”

“பாண்டீன், எனக்குத் திருமணமாகி இரண்டு வருஷம் முடியப் போகிறது. இனிமேல் நான் உனக்குச் சகோதரி... நான் கல்யாணம் செய்து கொண்டதில் உனக்குச் சம்மதம்தானே?”

இந்த நிகழ்வே, இம் மனதின் இருளை, தவிப்பை வெளிச்சத்தில் காட்டும் ஒளியேறிய வரிகள். இவை எவ்வகையிலும் தவறாக அர்த்தங்கள் கொள்ளக் கூடாதவை. விலைமாதாக வந்தவள் இப்போது சகோதரியாகிவிட்டாள். பாண்டியனின், இந்தச் சுனை நீருக்கான ஏக்கமே

அவனை நெருப்பினில் ஆழ உட்செல்ல; அத்தகிப்பில் குளிர் நீரைத் தேட அவனை என்றென்றும் நச்சரித்த வண்ணம் அவனின் நிலையற்ற வாழ்வும் ஏக்கமும் தேடலும் இருந்து வந்துள்ளது.


"அலைந்தலைந்து திரிந்தே அழிவேன்" :

கேள்விகளே பாண்டியனினதும் செல்லையாவினினதும் நிலையாமையின் நொய்மைகளாக மேலெழுகின்றது.

செல்லையாவின் சண்டைகளினூடான தப்பித்துச் செல்லும் நடை பயணத்தின் பொழுது, "யாருக்காக, எதற்காக இந்தக் காட்டில் வந்து கிடக்கிறோம்? வெள்ளையர், ஜப்பானியர், சீனர் இவர்களெல்லாம் யார்? ஒருவரை ஒருவர் விரட்டி வேட்டையாடி மாய்வது ஏன்? இவர்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? விடுதலை என்றால் என்ன? யாருக்கு யாரிடமிருந்து, எதற்கு எதிலிருந்து, எங்கிருந்து எங்கே செல்ல…

என்பதான கேள்வி எழுகின்றது. இதற்கு விடைகள் இல்லை. கேள்விகளே பூதாகரமாய் வடிவெடுத்து நிற்கின்றன. 

எதன் காரணமாய் தான், தன் காதலை இழக்க நேர்ந்தது என்ற கேள்விக்கு செல்லையா பதில் தேடுகிறான். சமுதாயக் கற்பிதங்களின் விளைவா அல்லது இதை பெரிதாக எண்ணி கண்ணீர் சிந்தும் என் அகந்தையின் விளைவா எனத் தடுமாறுகிறான். பின் அழுகைக்குப் பின்னான ஒரு குழம்பித் தெளிந்த அமைதியை எட்டுகிறான். அதன் பின்னான தனது நிலையற்ற வாழ்வினுள் நுழைகின்றான். 

செல்லையா உணரத் தொடங்கும் நிலையாமையில் பாண்டியன், அதன் இறுதிக் கோடி வரை பயணிக்கின்றான்.

போருக்குப் பின் என்ன செய்வதென்று தெரியாது,ஊருக்கு போவதற்கும் மனம் வராது,  இறுதியில் இந்தோனேசியா சுதந்திரத்திற்காகவே போராட வேண்டும் என்று முடிவு செய்கிறான். தனது வாழ்வின் சலிப்பிலிருந்து தனக்கான தற்காலிக தப்பித்தலாக அதைச் செய்கிறான். தனக்கென ஒரு அடையாளத்தைத் தேடிக் கொள்ள முடியாமல் சமுதாயம் சொல்லும் வீரம்; நாடு என்ற கருத்தாக்கங்களில் தஞ்சம் புகுகின்றான். அவனைக் கேள்விகள் துளைத்தெடுக்கின்றன. 

 அதிலிருந்து தப்பிக்கவே அவன் தொடர்ந்து அலைபவனாய் இருக்கின்றான். எப்போதுமே செயல் பரபரப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவன் மன குழப்பத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கின்றான். அதற்காகவே பொய் கற்பனைகளாயினும் அழகான கற்பனைகளாக லட்சியவாதத்தையும்; வீரத்தையும்; பற்றுதலையும் தனக்கான தப்பித்தலாக வரித்துக் கொள்கிறான்.

தனது சொந்த ஊரின் ஞாபகங்களை அதற்கான ஏக்கத்தைப் பெருங்கனவுகளாகச் சுமந்து கொண்டு எங்கும் திரிபவனாயிகின்றான். ஆனால் அங்கு திரும்பிச் செல்ல ஏங்கியும், அங்கு செல்ல இயலாதவாறு செய்யும் தனது மீறல்களிலாலான தனிமையினால் ஏற்படும் ஒரு ஈரடி நிலையில் மாட்டிக் கொண்டவனாய் தனது பேரிரைச்சலும் பேரமைதியுமான அந்த நொய்மையை, அத்தேடலை ஆற்றுப்படுத்தி கொள்கிறான். அதன் பின் இந்தோனேசியா போரில் ஈடுபட்டு அப்போராட்டத்திலும் நிலை கொள்ள முடியாமல்,காட்டில் இருந்து வெளியேறி அவனின் ஏக்கத்திற்கும் தேடலுக்கும் கேள்விகளுக்கும் உலகத்தால் கொடுக்க முடிந்த ஒரே பதிலான மரணத்தைத் தழுவுகிறான். 


சீச்சீ! உடல் அடங்காது; மனம் ஒடுங்காது; யாரும் எதையும் அறிவு வழியில் நிறைவேற்ற முடியாது. உடலும் மனமும் விருப்பமும் ஒழுக்கமும்! சீச்சீ . 

எல்லாப் பக்கத்திலிருந்தும் தடங்கள். மனதுக்கு உடல் முட்டுக்கட்டை, உடலுக்கு மணம் இடைஞ்சல். சீச்சீ! மனம்; உடல் எல்லாம் கற்பனை! நாமே வகுத்த வேறுபாடு. 

காரளகப் பெண்சிகாமணியே, 

நான் மந்தையில் இருந்து விலகிப் பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும், பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி, இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி, ஒட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிகிறேன்;அலைந்தலைந்து திரிந்தே அழிவேன். 


 படைப்பிலக்கியத்தின் பெரும் பெரும் வகிமைகளான, வாழ்வியல்,பின்நவீனத்துவம்,வரலாறு, சாகசம், அனுபவம் என எல்லாவற்றையும் தன்னகத்தே உள்ளடக்கி இந்நாவல்கள் உருக் கொண்டாலும் கேள்விகள் விஞ்சி நிற்கும் இருத்தலியப் பிரதிகளாகவே இந்நாவல்கள் கருக் கொள்கின்றன. 



நூற் பட்டியல் :

1.கடலுக்கு அப்பால் - பா. சிங்காரம்

2.புயலிலே ஒரு தோணி- பா. சிங்காரம்




x

x

Comments

Post a Comment

Popular posts from this blog

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்

இருத்தலியமும் போர்ப் பைசாசமும்