கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்
யன்னல்
எழுத்தாளர் சல்மாவின் 'இரண்டாம் ஜாமங்களின் கதை' நாவலைக் குறித்து
தேடிச்சோறு நிதம்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பம் மிக உழன்றுப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங்கூற்றுக் கிரை என பின் மாயும் பல வேடிக்கை மனிதர்களால் உருவாக்கப்பட்டது நாம் வாழும் இந்தச் சமூகம்.
இக்கட்டமைப்பிற்குள் இயந்திரகதியில் வாழ்ந்திறக்க நாம் பணிக்கப்பட்டிருக்கின்றோம். இதில் ஏதொரு குளறுபடியும் நேராமல் இருக்கப்பார்த்துக்கொள்ள அது அம்மனிதர்களையே நியமித்திருக்கின்றது. இந்த இயந்திரகதிக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள- மனிதர்களைப் பழக்கப்படுத்த வேண்டியதை சமூகம் தனது முழுமுதற் கடமையாக பாவிக்கின்றது. இதற்கு வகையாக, மனிதர்களை வகைப்பிரித்து வைத்துக் கொள்ள வேண்டியது அதற்கு அவசியமாகிறது.
இதன்படி நோக்குகையில் மனிதன் ஒரு உயிரினம் என்பதைத் தாண்டி ஏற்படுத்தப்பட்ட அனைத்துமே சமூகக் கட்டமைப்பின் கற்பிதங்களே ஆகும்.
சாதி-மதம்-நிறம்- மொழி-நாடு எனப் பிரிந்து கொண்டு ஒருவரையொருவர் துன்புறுத்திக் கொண்டு வாழும் மனிதர்களுக்கு - உண்டுறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகளுக்கு, பாலின அடிப்படையில் பெண்களை ஒடுக்கி அவர்களின் மீதான அடக்குமுறையை முன்னெடுப்பது அத்தனை கடினமானதாக இருந்திருக்கவில்லை. உண்மையில் அதுவே சமூகம் ஏற்படுத்திய முதல் அடக்குமுறையாக இருந்திருக்கும். இன்ன மதம், கலாச்சாரம் என்று குறித்துக்கூற முடியாதபடிக்கு உலகனைத்திலும் பொதுப்படையானதாக- அனைத்து இடத்திலும் நிகழ்ந்து வருவது பெண்களின் மீதான அடக்குமுறையேயாகும்.
இக்கதை ஆண்களால் உடலளவிலும் மனதளவிலும் அடைத்து வைக்கப்பட்ட, வேற்று ஆட்களைக் கண்டால் உள்ளரைகளுக்குள் ஒளிந்துகொள்ளக் கற்பிக்கப்பட்ட பெண்களின் உலகத்தை பற்றிச் சொல்லும் கதை. பிறரால் ஒரு பரிமாணமாகவே பார்த்தறியப்பட்ட பெண்களும், அத்தனை மனித உணர்வுகளோடு வாழ்க்கையை- அதன் முழு அர்த்தத்தோடு வாழ்ந்து தீர்க்க ஏங்கும் சராசரி மனிதர்களே என்பதை உணர்த்தச் செய்ய முனைவது இரண்டாம் ஜாமங்களில் கதை.
முதலாம் ஜாமத்தை விட விபரீதமானது கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்.
இவர்களை தனது அளவீடுகளைக் கொண்டும் மதிப்பீடுகளைக் கொண்டும் அடக்கி வைக்க இயன்ற சமூகக் கட்டமைப்பினால், இவர்களின் புற உலகின் மூலம் அதை வலிந்து திணிக்க முடிந்த அதனால், இவர்களின் அகவுலகையும் அதற்கேற்ற அஃறிணைப் பொருளாக, முழுவதாக மாற்ற முடிந்திருக்கவில்லை.
அவ்வகவுலகம் திடுக்கிடச்செய்யும் செய்யும் மூர்க்கத்துடன் விழித்துக்கொண்டு இவ்வனைத்தையும் விலக்கிக் பார்க்கும் சமநிலையை இரண்டாம் ஜாமம் இவர்களுக்கு அழித்திருக்கின்றது.
அதைப் பெரிதும் உணர்வது; தமது வாழ்வு தங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுவதை சகித்துக் கொண்டு ஏற்று வாழ முற்படும்- அதை முற்றிலும் ஏற்று வாழ முடியாதபடிக்கு அதன் அபத்தத்தை வெறித்துப் பார்த்தபடி எரிச்சலடையும்; சலிப்படையும்; கோபமடையும்; சோர்வடையும் இவ்விளம்பெண்கள் தங்களுக்குக் கையளிக்கப்பட்ட வாழ்வை முழுதும் சகித்து வாழ தங்களைப் பழக்கிக் கொள்ளக் கற்றுத் தரப்படுவதும், அதைப் போன்றதொரு அவலத்தில் வாழ்ந்திழைக்கும் பெண்களாலேயே தான் ஆகும். ஆண்களால் ஏற்படுத்தப்பட்ட கற்பிதங்களால் தங்களின் உணர்வுகளை மட்டுப்படுத்தி மலுங்கடித்துக் கொண்ட பெண்களே, ஒரு சமூக சுத்திகரிப்பு இயந்திரமாக அவர்களுக்கு பயன்படுகின்றனர்.
இந்த செயற்கையான கற்ப்பிதங்களுக்கு உள்ள முதன்மையான குறுக்கீடு இளம் பெண்களே. அவர்களின் மனதின்- உடலின் வேகமே இந்த செயற்கைக் கற்பிதங்களை தங்களுக்கு இந்த இயற்கையினால்; இயல்பினால்; மானுட உண்மையினால் ஏற்படக்கூடும் அழிவிற்கு அஞ்சுவனவாய் அதை அடக்கி ஒடுக்குவதில் தீவிரத்தோடு செயல்படுகின்றன.
இக்கட்டமைப்புகள் இவர்களின் எந்தக் கேள்விகளையும் எதிர்கொள்ளும் மனசாட்சியைப் பெற்றிருக்கவில்லை. அவை அக்கேள்விகளை அலட்சியம் செய்வதாய் நடித்துத் தப்பித்துக் கொள்ளவே எத்தனிக்கின்றது. இக்கட்டமைப்புகள் மனிதர்களின் வழியே இயங்கி, தன்னை மனிதருக்குள் வேரூன்றச் செய்கின்றது. இவர்களின் வாழ்க்கைமுறை நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றாகவும், அமலாக்கப்படும் அதிகாரக் கட்டளையாகவும் தன்னை இவர்களிடத்தில் இருத்திக் கொண்டுள்ளது. அதனுள் பெண்களின் வாழ்வு செரிக்கப்படுகின்றது.
தங்களுக்கு பிடித்தவரோடு வாழ்வை அமைத்துக் கொள்வதில் ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயமா? என இக்கதையில் பெண்கள் வினவியபடி இருக்கின்றனர். ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய குடும்பமுறையே, இங்கு பெண்களை, தெரிந்தே மீள முடியாத வேதனையில் தள்ளுவதாக உள்ளது. தங்களை விட அதிகப்படியான வயதுடையவர்களுக்கு மணமுடித்துத் தரப்படும் பெண்கள் அவ்வாண்களின் கீழ்மைகளைப் பொறுத்துக் கொண்டு வாழப் பணிக்கப்ப்படுகின்றனர். தெரிந்தே இந்த அவலம் தலைமுறைகளாக நிகழ்ந்தேருக்கின்றது.
இதற்கு இந்த கட்டமைப்பு கூறும் நியாயமாவது- "இது என்ன ஊர் உலகத்துல நடக்காமையா இருக்கு; ரெண்டு பிள்ளைய பெத்து அதை வளர்க்கிற வேலையில மத்ததெல்லாம் நெனப்புக்கு வராது" என்பதே ஆகும்.
தனக்குச் சற்றும் பிடிக்காதவர்களோடு திருமணம் ஆனதை ஏற்க இயலாது, தங்களின் வீட்டிற்க்கே திரும்பிய பெண்களை ஊரார் பழித்துப் பேசிக் கூசச் செய்தே அவர்களைக் கூனிக் குறுகிப்போய் முடங்கச் செய்கின்றனர். மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களின் நடுவே ஒரு எரி நட்சத்திரமாக தங்களின் வாழ்வை மெல்ல மெல்ல கடத்திவிட முனைந்தாலும், அவர்களின் காதலுக்கான அன்பிற்க்கான ஏக்கம் அவர்களை வேறொருவரிடத்தில் இட்டுச்செல்வதால், பெரும் குற்றம் செய்தவர்களாக தண்டிக்கப்படுகின்றனர்.
இரவோடு இரவாக கருவைக் கலைத்து விட முயலுகையில் தானும் இறக்கும் மைமூன், முன்பே தயாராக தோண்டி வைக்கப்பட்ட குழியில் பெற்றோர்களால் விஷம் கொடுக்கப்பட்டு தற்கொலை செய்தது போல் புதைக்கப்படும் பெண், தன் சிறுவயதில் ஆசையாக பால் அருந்தக் கொடுத்த அதே டம்ளரில் அதே தாய் விஷத்தைக் கலக்கி கொடுக்க, அதை அருந்தி இறக்கும் பிர்தவ்ஸ் என சமூக இயந்திரத்தால் கழிக்கப்பட்ட பெண்களாக இவர்கள் எஞ்சுகின்றனர். இப்படி, தாய்மையையே கலங்கம் கொண்டதாகச் செய்வது எது? என்ற கேள்வி எழுகின்றது. நிச்சயம் அது தன்னுணர்வின்றி அனைவரிடத்திலும் வேரூன்றிப்போன இக் கற்பிதங்களே ஆகும்.
சமூகம், தான் கழித்துப்போட்ட, அதன் இயலாமையினால் உருவான இவர்களை ஒதுக்கி எரிந்து, தான் முழுமையான ஒன்று என்று காட்டிக்கொள்கிறது . இப்படி இவர்களைத் தவறானவர்கள் என ஒதுக்கித் தள்ளிய சமூகம், 60 வயதான ஒரு முதியவர், 25 வயதான பெண்ணை நான்காவது மனைவியாக திருமணம் செய்துகொண்டு வந்து அனைவருக்கும் பெருமையாக அறிமுகப்படுத்தும் போது தங்களின் மனதளவில் அதை வெறுத்தாலும், அது தவறானதில்லை என வரவேற்று விருந்து வைக்கின்றது.
வெறும், திருமணம் செய்வதற்கான பண்டமாக மட்டும் பார்க்கப்படும்; அவ்வாறே நடத்தப்படும் பெண்களால் அதற்கு எதிர்வினையாக சலித்துக் கொள்ளவும்; ஆயாசப்படவும்; எண்ணிச் சோரவும் மட்டுமே முடிகின்றது. நிசப்தத்தின் பள்ளத்தாக்கில் புதையுண்டு தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும் குரல்களே இவர்களுடையதாகிறது.
'பெண்களின் விருப்பத்தை பற்றி யாருக்கும் கவலை இருக்க முடியும். கல்யாணதன்று கையில் கருகமணியோடு ஹாஜியம்மா ரெடியாக இருக்கையில் அரசரத்துகள் சாட்சிகளோடு வந்து பெண்ணிடம் கேட்கும் சம்மதமான ஷாயிதுக்கு ஏதாவது அர்த்தம் தான் இருக்க முடியுமா? ஊரைக் கூட்டி முடித்து, கடைசி நேரம் கேட்கும் பொழுது எந்தப் பெண்ணாவது தனது அபிப்பிராயத்தை துணிந்து தான் சொல்ல முடியுமா' என்று தனது மகளின் பொருத்தம்ற்ற திருமணத்தை எண்ணி ஆயாசப்படுகிறாள் ஒரு தாய்.
கணவனை இழந்து அவனது நினைவிலேயே ஏங்கும் செரிபா, தன்னையும் மீறிய காதலுக்கு ஏங்கும் நபிஸா, தன் காதலனோடு ஊரை விட்டகழும் பாத்திமா, தன் காதலை இழக்கும் பரிதா, புதையல் தனக்குக் கிடைக்கும் என வாழ்நாள் முழுவதும் ஏழ்மையில் காத்திருக்கும் நூரம்மா, சிறுமி என்ற சலுகையோடு ஊர் சுற்றி, பின் வீட்டிலேயே முடங்கத் தயாராகும் ராபியா; மதினா எனப் பெண்கள் என்ற பொதுப்படையான கூட்டு உணர்வில் இவர்களின்- பிற பெண்களின் வெளிப்படையான, சமயங்களில், மூடி மறைக்கும் பேச்சுகளால் நிறைந்து திடுமென சூழ்ந்து பெருகிய மர்மத்தின் சூழ்ச்சியிலிருந்து வெளியேற வழி தேடி அலையும் பெண்களால் நிறைக்கப்பட்டிருக்கின்றது இக்கதை.
இப்பெண்களுக்கு உள்ள ஒரே ஆறுதல் சுருண்டுபோய் படுத்துக் கொள்வதே ஆகும். "தலையில எழுதுன விதியான நசீபு, அத மீறி ஏதாவது நடக்குமா? எதுவும் நடக்காது" என்று ஆறுதல் பட்டுக்கொள்வதே ஆகும்.
இவர்களின் வாழ்வை மேலும் குழைத்துப் போடுவது பணம்.
பாத்திமாவினதும் நூரம்மாவினதும் வாழ்வு அதன் பாற்பட்டதே ஆகும். ஏழ்மை நிலை என்று சிறு பெண்களை வயசாளிகளுக்கு திருமணம் செய்யும் அவலங்களும் ஆங்காங்கே நிகழ்கின்றது.
சமூகம் என்பது நூரம்மா, தனக்கு வந்து புதையலைத் தரும் என நம்பிக் கொண்டிருக்கும் ஜின்னை போன்றது. அது நம்மக்கானதை நம்மிடம் புதையலாகத் தருவது போல், அண்டாவை வாழ்நாள் முழுவதும் நம்முன் குறுக்கும் நெடுக்குமாக, நமக்குக் கொடுப்பதற்கென்று வைத்திருப்பதாக நம்மை நம்ப வைத்து, நமது வாழ்வை உறிஞ்சவல்லது. தனக்கு எதிரில் வருபவர்களை கொன்றுவிடும் ஜின் போல, தனது கற்பிதங்களுக்கு அடங்காதவர்களை கொல்லவல்லது சமூகம்.
மனசாட்சியின் கேள்விகளை முழுவதுமாக கிரகித்துக் கொள்ளாவிடினும் அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதன் சுவடுகள், இக்கதையில் சிலரிடம் வரத்தான் செய்கின்றது. தனது மகள் பாத்திமா வேறொருவனுடன் சென்றுவிட்டதற்கு, ஊர் முன்னிலையில் நிற்கவைக்கப்பட்டு, அவள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதாக நூரம்மாவிடம் கூறப்படுகின்றது. திடுமென தனது உடல் எங்கும் பரவிய சுதந்திரம், அவளை, அவர்களை நோக்கி கேள்வி கேட்கச் செய்கிறது. ஒரு பெண் அத்தவறை செய்ததால் தண்டனையைக் கொடுக்கும் ஊர் ஆண்கள் அனைவரும் நிதம் அத்தவறையே நித்தமும் செய்வதாக அவளது கை அவர்களனைவரையும் சுட்டிக்காட்டித் தாழ்கிறது. அதைக் கேட்டுக் குழப்பமும் கோபமும் மட்டுமே இவ்வாண்களால் அடைய முடிகின்றது.
இக்கதையில் காதர் ஒருவனே தனது மனசாட்சியின் குரலை செவிமடுப்பவனாக கதையில் வருகிறான். ஆனால் அவனும் அதைத் தாண்டிய எச்செயல்பாட்டிலும் தனது மனதின் கேள்விகளை முன்னிறுத்தாது, பிறரைப் போல் இயந்திரகதியிலேயே செயல் செய்பவன் ஆகின்றான்.
பெண்களிடம் எழும் கேள்விகள் அவர்களுக்குள்ளேயே பதுங்கிக் கொள்கின்றன. சிறுமியான ராபியாவின் கேள்விகள் கூட அக்கதிக்கே ஆளாகின்றன. தனது அக்காள் வஹிதா, திருமணத்தின் பின் சந்தோஷமாக இல்லை என்பது சிறுமியான தனக்கே தெரிந்திருக்கையில், அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் ஏன் தெரியலே? ஒருவேளை தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறார்களோ? என்று எண்ணமிடுகிறாள்.
வகிதாவுக்கு தன் திருமணத்தை இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியாததாக இருந்தது. இந்த நினைவுக் குழப்பத்தை எப்படி நிறுத்துவது என்று அவளுக்கு தெரியவில்லை. போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்று தன்னை தேற்றிக்கொண்டாலும், சந்தோஷத்தினால் வரவேண்டிய விஷயம், பழக்கப்படுத்திக் கொள்வதன் வழியேதான் வரப்போகிறது என்கிற நினைப்பு அவளுக்கு துக்கத்தை உண்டாக்குவதாக உள்ளது.
கவலையோ, துக்கமுமோ, கஷ்டமுமோ, வேதனையோ பழக்கப்படுத்தலின் வழியே தான் தாங்கிக் கொள்கிறோம். அப்படியே இந்த வாழ்வும் என்றால், இது எவ்வளவு பெரிய நரகம்.
தான் இரவில் தேவைப்படும் ஒரு பொருளாகவே தன் கணவருக்கு இருக்கிறோம் என்று திருமணமான ஒரு வாரத்திற்குள் உணரத் தொடங்குகிறாள். தன்னை, அத்துமீறிய சீண்டலுக்கு உட்படுத்தும் மாமனார் மீதான பயத்தோடு, தான் சிறிதும் விரும்பாத குடும்பத்தில் இனி தானும் ஒருவராக இந்த நான்கு சுவர் கொண்ட அறையில் காலம் முழுவதும் வாழ வேண்டும் என்று எண்ணிச் சோர்கிறாள்.
பின், தாய் வீடு திரும்பும் வஹிதா,தான் திரும்பி அந்த நரகத்திற்கு செல்லக்கூடாதென உறுதி கொள்கையில், தான் கருவுண்டாகி இருப்பதை அறிந்து, இனி தான் நினைத்தபடி எதுவும் நடக்கப்போவதில்லை என்று எண்ணிக் கதறுகிறாள்.
இப்படியாக இன்னொரு இளம் பெண்ணின் கனவுகளும் அவளது வாழ்வும் அவளிடமிருந்து கொள்ளடிக்கப்பட்டு விட்டது.
Comments
Post a Comment